சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதான பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக, கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட சிக்கலான நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருதானை பொலிஸ் பிரிவில் அடையாளங் காணப்பட்ட, விபரங்களை உறுதிப்படுத்தமுடியாத, 70 முதல் 80 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஒருவர் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக, கொரோனா தொற்று நிலைமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம், வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணமாக, கொரோனா தொற்று நிலைமை மற்றும் சிறுநீரக நோய் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 191 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 502 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று க்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது.

No comments: