News Just In

3/09/2020 08:21:00 AM

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நிறைவு


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன் தேசிய பரீட்சைக்காக விண்ணப்பங்கள் இணையத்தளத்தினூடாக பொறுப்பேற்கப்படுவது இதுவே முதலாவது சந்தர்ப்பம் என்பதால் இது வெற்றிகரமாக இடம்பெறுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் இது தொடர்பாக காட்டிவரும் ஆர்வம் உயர்மட்டத்தில் காணப்படுகிறது. இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான தவறுகளை திருத்திக்கொள்ள முடியும் என்றும் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

விண்ணப்பதாரர்களின் தகவல்களை சரியான முறையில் பெற்றுக்கொள்வதற்கு இதன் மூலம் முடிகிறது. மாணவர்களை அடையாளம் காண்பதற்காக இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

மாணவர்களின் அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்படுவதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இலக்கத்தின் மூலம் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மாணவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு , இதனால் நேர்முகப் பரீட்சைகளின்போது பரீட்சை சான்றிதழ்களை எடுத்துச்செல்ல வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: