News Just In

12/08/2019 03:52:00 PM

மரம் முறிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு


கிளிநொச்சி – கந்தபுரம் பகுதியில் தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததில் குழந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. 1 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையை அவரது அம்மம்மா இன்று காலை குளிப்பாட்டிக்கொண்டிருந்தபோது, குழந்தை மீது தென்னை மரம் சரிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் அம்மம்மா படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 27 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



No comments: