பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நடத்திய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பின்னர், கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
தேர்தல் பிரசாரங்களின்போது, பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இருவர் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து தேர்தலின் பின்னர் மஹர பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கடந்த 13 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர்.
பின்னர் 72 மணித்தியாலங்கள் அவர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதியளிக்கப்பட்டது.
இந்த விசாரணைகளின்போது, ராஜித கூறியதற்கு அமையவே தாம் ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிக்கு அறிவித்தது.
இதனையடுத்து அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளனர்.

No comments: