News Just In

12/09/2019 05:36:00 PM

நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு அடுத்த மாதத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு


நிர்வாக சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் தொடக்கம் 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படுமென்று அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றச் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிர்வாக சேவையில் 2ம் மற்றும் 3ம் தரங்களுக்கு விசேடமாக தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆலோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அமைச்சர்களுக்குத் தேவையான உத்தியோகபூர்வ வீடு மற்றும் வாகனங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வமான வீடுகளைக் கையளிப்பதில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மாத்திரமே கையளித்திருப்பதாகவும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றச் செயலாளர் தெரிவித்தார்.

இதேபோன்று முன்னாள் அமைச்சர்களும் இவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த வாரம் அளவில் இவை கையளிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அமைச்சு மற்றும் அலுவலகங்களுக்காக முடிந்தவரையில் அரச கட்டிடங்களை பயன்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரிய தொகையைச் சேமிக்க முடியும். ஜனாதிபதி செயலகமும், இது தொடர்பான கோரிக்கையை விடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரச சேவை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக அடுத்த மாதத்தில் மாவட்டச் செயலாளர்களின் மாநாடு நடாத்தப்படும். இதற்காக அரச ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்கப்பட உள்ளது என்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மன்றச் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

No comments: