நீதியையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வாக்குரிமையை பயன்படுத்துவோம் எனும் தொனிப்பொருளிலமைந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை சட்டத்துறைசார்ந்த நிபுணத்துவ வளவாளர்களைக் கொண்டு நடாத்திவருவதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே.லவகுசராசா தெரிவித்தார்.
வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்கு மாகாண மக்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு சனிக்கிழமை 02.11.2019 மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய கேட்போர் அரங்கில் நடைபெற்றது. அம்பாறை,மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் பெண்கள் வலையமைப்பு, சிவில்அரசியல் உரிமைகளுக்கான அமையம், சூழலியல் நீதிக்கான அமைப்பு, அகம் நிறுவனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் இணைந்து ஒருங்கமைத்திருந்த இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலிருந்தும் சுமார் 300 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
சர்வதேசசட்டத்துறை விரிவுரையாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம். ஹக்கீம் நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இலங்கையில் நீதியையும் ஜனநாயகத்தையும் மக்களையும் பாதுகாத்து நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பக்கூடியவர்களுக்கு தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்பதற்கான தெளிவை மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே.லவகுசராசா தெரிவித்தார்.









No comments: