News Just In

7/06/2026 08:11:00 AM

காணாமல்போன பௌத்த துறவியின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - அடர்ந்த காட்டில் மீட்கப்பட்ட பொருட்கள்

காணாமல்போன பௌத்த துறவியின் எலும்புக்கூடு கண்டெடுப்பு - அடர்ந்த காட்டில் மீட்கப்பட்ட பொருட்கள்


காணாமல் போன பௌத்த துறவியொருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடொன்று பொதுமக்களின் தகவலின் பேரில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாகக் காணாமல் போயிருந்தவரும், தெபரகல ஆரண்ய சேனாசனத்தில் வசித்து வந்தவருமான பம்பரகல அபயவன்ச தேரருடையது என சந்தேகிக்கப்படும் எலும்புகள், சேனாசனத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சேனாசன இடத்திலிருந்து சுமார் 02 கிலோமீட்டர் தொலைவில் அவை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேன் சேகரிப்பதற்காகக் காட்டிற்குச் சென்ற ஒரு குழுவினரால் இந்த எலும்புகள் முதலில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள், குச்சவெளி பிச்சமல் விகாரையில் வசித்து வரும்கெப்பெட்டியாவே அரண தேரருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த தேரர் குச்சவெளி பொலிசாருக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் நேரில் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, ​​ஒரு மரத்தின் அடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் காணாமல் போன துறவியுடையவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு காணாமல் போன அபயவன்ச தேரர் பயன்படுத்திய ஒரு ஜோடி மூக்குக்கண்ணாடிகள், சில மருந்துகள் மற்றும் அவரது அங்கியின் சில பகுதிகள் கண்டெடுக்கப்பட்டதால், அந்த எலும்புக்கூடு காணாமல் போன துறவியுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன அந்தத் துறவி ஒரு காலத்தில் மேற்கத்திய மருத்துவராகப் பணியாற்றியவர் என்றும், கடைசியாக கொஸ்கம, சாலாவ மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சங்கைக்குரிய அபயவன்ச தியானம் செய்த மடாலயம், காட்டு விலங்குகள் நிறைந்த ஒரு அடர்ந்த வனத்தின் நடுவில் அமைந்துள்ளது. குறித்த தேரர் காட்டில் தனியாக நடந்து சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஒரு மாதத்திற்கும் மேலாக அவரைத் தேடித் தேடுதல் வேட்டையை நடத்தியது. ஆனால் எந்தத் தகவலும் கிடைக்காததால் அந்தத் தேடுதல் வேட்டையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் எலும்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை பதில் நீதிபதி ஏ.எஸ்.எம். சாஹிர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணை நடத்தி, குச்சவெளி சுற்றுலா நீதிபதிக்கு மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments: