பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) மென் திறன் பயிற்சித் திட்டம் மற்றும் தொழில் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை என்பன சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) சிறப்பாக நடைபெற்றன.
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் அவர்களின் வழிகாட்டலிலும், கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் கல்விப் பணிப்பாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தருமான பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
பயிற்சித் திட்டத்தின் வளவாளர்களாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எம்.எம். முபஷ்ஷிர் மற்றும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் ஆகியோர் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதன் நடைமுறைப் பயன்பாடுகள், மென் திறன்களின் அவசியம், தொழில் உலகின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள் தொடர்பாக விரிவான விளக்கவுரைகளை வழங்கினர்.
நவீன தொழில்நுட்ப உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், செயற்கை நுண்ணறிவை திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் கல்வி மற்றும் தொழில் துறைகளில் புதிய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதையும் வளவாளர்கள் வலியுறுத்தினர்.
பயிற்சியில் பங்கேற்ற இளங்கலை மாணவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் எதிர்கால தொழில் பயணத்திற்கு இப்பயிற்சி வழிகாட்டும் ஒரு பயனுள்ள தளமாக அமைந்தது எனப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஐ. அலியார், நிதிப் பணிப்பாளர் ஏ.சி. முஹம்மட், சிரேஷ்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், பிரதி நிர்வாகப் பணிப்பாளர் எம்.எம். உதுமாலெவ்வை, ஊடகப் பணிப்பாளர் யூ.கே. காலித்தீன் ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
No comments: