News Just In

5/14/2026 06:12:00 PM

களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் - தாயகச் செயலணி அழைப்பு!

களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் - தாயகச் செயலணி அழைப்பு!



களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையை நினைவு கூருங்கள் - தாயகச் செயலணி அழைப்பு!

தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள் முன்வர வேண்டும் என தாயகச் செயலணி அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு அழைபு விடுத்த தாயகச் செயலணி மேலும் கூறுகையில் -

ஈழத்தமிழினத்தின் இனப்படுகொலை நாளாகிய மே. 18 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை கடைப்பிடிக்கும் முகமாக 2009 இறுதி யுத்தத்தின் போது எமது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலை நடத்தப்பட்டதன் நினைவாகவும், அக் காலப்பகுதியில் எமது மக்கள் பட்ட வேதனைகளை உணர்த்தும் விதமாகவும், தற்கால இளைய சமுதாயத்தினருக்கு எமது மக்கள் பட்ட துன்ப துயரங்களை கடத்தும் நோக்குடனும், எமது மக்கள் இறுதி யுத்த களத்தில் தங்களை பட்டினிச் சாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அருந்திய உப்பில்லாக் கஞ்சியினை நினைவூட்டும் விதமாக, அக்கஞ்சியினை வடக்கு கிழக்கு தாயக மக்கள் அனைவரும் பருகி எம் மக்களின் துயரில் ஒன்று கலக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் 12.05.2026 ஆம் திகதி தொடக்கம் 18.05.2026ம் திகதி வரை தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்குப் பகுதிகளில் எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட பிரதேசங்களை மையப்படுத்தி நினைவுத் தூபிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களினதும் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கும் விதமாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து மே 18ஆம் திகதி வரை குறித்த நினைவேந்தல் கடைப்பிடிக்கப்படவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் எமது தாயக மக்களும் உணர்வு பூர்வமாகக் கலந்து எமது இனம் எதிர்நோக்கிய பட்டினிப்போரின் துயரங்களில் பங்கெடுப்பதுடன், சிங்கள அரசு திட்டமிட்டு நடத்திய அந்தப் பட்டினிப் போரின் வலிகளை தற்கால இளையோருக்கு உணர்த்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு.

மேலும், இக் காலப்பகுதிகளில் எமது மக்கள் தங்கள் பிரதேசங்களில் கலியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்பதுடன், விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்வுகளையும் முழுமையாகத் தவிர்த்து, பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

மாணவர் அமைப்புகள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியற் பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என இன உணர்வாளர்கள் அனைவரும், ஸ்ரீலங்கா அரசு தமிழினத்திற்கு எதிராக உணவையும், மருந்தையும் முழுமையாகத் தடுத்து, திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு எம் உறவுகள் பட்ட துயரில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: