News Just In

2/21/2026 10:42:00 AM

பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார்!


பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார்



பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ரகசியமாக பெண்களை அழைத்து வந்த ஆண்ட்ரூ தொடர்பில் புகாரளித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை லண்டன் பொலிசார் மிரட்டியுள்ளனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியே, தற்போது இதை வெளிப்படுத்தியுள்ளார். வாரத்திற்கு பலமுறை பெண்களை அரண்மனைக்குள் ஆண்ட்ரூ அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1998 முதல் 2004 வரையில் ஆண்ட்ரூவின் பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டவர் பால் பேஜ். ஆனால், ஆண்ட்ரூவைப் பார்க்க வந்த பெண்களின் பெயர்களை அறிய இவர் அனுமதிக்கப்படவில்லை என்றே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் அவர் Thames Valley காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் விசாரணைக்கு உதவ முன்வந்துள்ளார். எப்ஸ்டீன் கோப்புகள் வெளிச்சத்திற்கு வந்ததன் பின்னர், Mrs Windsor என்ற ரகசிய அடையாளத்துடன் பெண் ஒருவர் ரகசியமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைந்தது அம்பலமானது.

எப்ஸ்டீனின் Lolita Express விமானத்திலேயே தொடர்புடையப் பெண் லண்டனுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது உண்மையை உடைத்த பேஜ், தலைநகரின் காவல்துறையிடமிருந்து தனக்கு மிரட்டல் வந்ததாக வெளிப்படுத்தியுள்ளார்.

Jon Savell என்ற அதிகாரியே, கடிதம் ஊடாக எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் அந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தனது தனிப்பட்ட மாளிகையில் ஆண்ட்ரூ அடையாளம் தெரியாத பெண்களை ரகசியமாக அழைத்து வந்துள்ளார் என்பவதை பேஜ் வெளிப்படுத்தியதன் பின்னரே Jon Savell எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் பாதுகாக்கப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்பது அவரது கடமை என நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடிதம் தம்மை மிகுந்த பணிவுடன் மிரட்டுவதாகவே தாம் உணர்ந்ததாக பேஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதன் பின்னர், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு லண்டன் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, லண்டன் விமான நிலையங்கள் எப்ஸ்டீன் தொடர்பில் மனித கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உதவ பயன்படுத்தப்பட்டதா என்பதை நிறுவ அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக ஸ்காட்லாந்து யார்டு தெரிவித்துள்ளது.

1997 மற்றும் 2003 க்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ தனிப்பட்ட முறையில் பெண்களை அழைத்து வந்தது தொடர்பாக பல பாதுகாப்பு மீறல்கள் இருந்ததாகவும் பேஜ் கூறியுள்ளார்.




மட்டுமின்றி, அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகளாக செயல்படுபவர்கள் சூதாட்டம், மதுபோதை என சீரழிந்த கலாச்சாரத்தை பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள ஒரு லாக்கர் அறையில் இருந்து பேஜ் நடத்திய 3 மில்லியன் பவுண்டுகள் முதலீட்டு மோசடி தொடர்பாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, ​​பேஜ் முதன்முதலில் ஆண்ட்ரூ தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில், பேஜின் குற்றச்சாட்டுகளை பெருநகர காவல்துறை ஒருபோதும் முழுமையாக விசாரிக்கவில்லை என்றும், மோசடி குற்றத்திற்காக அவர் மீதான தண்டனை அவரை நம்பகத்தன்மையற்றவராக மாற்றியதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், தமது குற்றச்சாட்டுகளை பேஜ் தொடர்ந்து முன்வைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: