நூருல் ஹுதா உமர்
உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில், நாவிதன்வெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறுவடை நிகழ்வு, புதிர் எடுத்தல், நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
மேலும் உழவர் கண்காட்சியும், பாடசாலை மாணவர்களினால் தமிழரின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனங்கள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை சிறப்பித்தன.
இதன்போது உரையாற்றிய தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,
“தைப்பொங்கல் என்பது ஒரு சமய விழா மட்டும் அல்ல; அது உழைப்பின் திருவிழா. விவசாயியின் வியர்வைக்கு மரியாதை செலுத்தும் நாள். இயற்கைக்கு நன்றி கூறும் நாள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப, இந்த தை மாதம் அனைவருக்கும் புதிய நம்பிக்கை, புதிய பாதை, புதிய முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும். பல இனங்கள், பல மதங்கள், பல பண்பாடுகள் ஒற்றுமையாக வாழும் நாவிதன்வெளி பிரதேசத்தின் ஒற்றுமையே எங்கள் பலமாகும். மக்களின் நலன், இளைஞர்களின் எதிர்காலம், விவசாய வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பில் பிரதேச சபை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு தமிழர் மாண்பை எடுத்தியம்பும் வகையில் நினைவுச் சின்னங்கள், நவதானியங்கள் அடங்கிய பொற்கிழிகள் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
இத்தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி, சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம செயலாளர் மு. கோபாலரெத்தினம், முன்னாள் தவிசாளர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவனரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments: