News Just In

11/06/2025 06:05:00 AM

'சங்கு' இணங்கினால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்படலாம்! எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு

சங்கு' இணங்கினால் மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்படலாம்! எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு



இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மட்டும் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை வரை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலே விசேடமாக வரப் போகின்ற வரவு - செலவுத் திட்டம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடல் நடத்தியிருக்கின்றோம்.

எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி, நிதி அமைச்சர் என்ற வகையில் தன்னுடைய வரவு - செலவுத் திட்ட யோசனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றார். அதற்குப் பிறகு இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்று 14 ஆம் திகதி அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

அதற்குப் பிறகு குழுக்கள் மட்டத்தில் விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மூன்றாம் வாசிப்பு இடம்பெற்று அதற்கான வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த விடயத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ந்தோம். நாடாளுமன்றக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய நிலைப்பாடுகளை அல்லது தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள்.

மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இன்றைய சூழ்நிலையிலே நாங்கள் என்னவிதமாக இதனை அணுக வேண்டும் என்கின்ற தங்களுடைய கருத்துக்களைச் சொன்னார்கள். இறுதி முடிவு எதுவுமே எடுக்கப்படவில்லை.

நாங்கள் ஜனாதிபதி தன்னுடைய யோசனைகளை எதிர்வரும் 7ஆம் திகதி முன்வைத்த பிறகு இரண்டாம் வாசிப்பு முடிவடைவதற்கு முன்னதாக எங்களுடைய அரசியல் குழுவோடு நாடாளுமன்றக் குழுவும் இணைந்து வாக்களிப்பில் எப்படிக் கலந்துகொள்வது என்பது சம்பந்தமான இறுதி முடிவெடுப்பது எனத் தீர்மானித்திருக்கின்றோம்.

அதைத் தொடர்ந்து நாங்கள் மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளோடு இணைந்து செயற்படுகின்ற விடயம் சம்பந்தமாகப் பேசப்பட்டது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியோடு தலைவரும் நானும் ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் உரையாடி இருக்கின்றோம். அது சம்பந்தமாக எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.

அந்த நிலைப்பாட்டில் அவர்களும் இணங்கி வருவார்களாக இருந்தால் நாங்கள் முன்னர் இருந்ததைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரோடு இணங்கிச் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, அப்படியாக இணங்கிச் செயற்பட முன்வருமாறு நாங்கள் அவர்களுக்கு அழைப்பும் விடுக்கின்றோம். மத்திய செயற்குழுவிலே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரோடும் நாங்கள் இது சம்பந்தமாக பேசலாமா என்ற விடயமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சகல தமிழ்த் தரப்புக்களோடும் பிரதான தலைமைத் தமிழ்க் கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரையும் இணைந்து செயற்படுமாறு அழைத்து விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரோடு வைத்தியர் சத்தியலிங்கம் சுவிஸ் விஜயத்தின் போது சம்பாசனைகளில் ஈடுபட்டிருக்கின்றார். அது பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரே நிலைப்பாட்டைத் தமிழ்க் கட்சிகள் முன்வைக்குமா என்கின்ற ஒரு கேள்வி இருக்கின்றது. ஆகவே, அது சம்பந்தமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இறுதியாகக் கோட்டாபய ராஜபக்ஷ அரச காலத்தில் அபாபோதைய குழுவுக்கு முன்வைத்த யோசனை ஒன்று இருக்கின்றது.

அதுதான் நாங்கள் இறுதியாக ஓர் அரசுக்கு முன்வைத்த யோசனை. நாங்கள் அதனை மற்றவர்களுக்கும் காண்பிப்பது என்று தீர்மானித்திருக்கின்றோம். அவர்கள் அதில் இணங்கி வருவார்களாக இருந்தால் அதை ஒரு பொது நிலைப்பாடாக நாங்கள் அரசுக்குத் தெரிவிக்க முடியும் என்று தீர்மானித்திருக்கின்றோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தமிழரசுக் கட்சி ஒரு கோரிக்கை விடுத்திருக்கின்றது. எப்படியான விடயங்களை நாம் கதைப்பது என இதற்கு முன்னர் நடந்த மத்திய செயற்குழுவிலே எடுத்த தீர்மானத்தின் அமைவாக தலைவரும் நானும் கையெழுத்திட்டு அரசியல் தீர்வு சம்பந்தமாக அவரோடு பேசுவதற்கு எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் இருவரையும் (தலைவர், செயலாளர்) சேர்த்து பத்து பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும், நேரம் ஒதுக்கித் தருமாறும் நாங்கள் அவரிடத்திலே கோரிக்கை விடுத்திருந்தோம்.

அந்தக் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப் போகும்போது அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலே கலந்துகொள்வதற்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். ஆகவே, அவர் திரும்பி வந்த பிறகு ஒரு நினைவூட்டல் கடிதமும் நான் அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் ஜனாதிபதியிடத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனினும் எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.

இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயற்படுகின்ற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள்.

நாங்கள் சில வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகின்றோம். மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத்திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகின்றவர்களோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பொதுவாக ஓர் எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை." - என்றார்.

No comments: