News Just In

11/26/2025 05:54:00 AM

அழிக்கப்பட்ட 56 வீடுகள் நிர்மாணிக்க மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்வு கோரிக்கை – ஸ்ரீநேசன்

மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை விடுவிப்பு: அழிக்கப்பட்ட 56 வீடுகள் நிர்மாணிக்க மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்வு கோரிக்கை – ஸ்ரீநேசன்



மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த 56 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

கல்வி எனும் வலுவான ஆயுதத்தால் சமூகத்தை மாற்ற முடியும். ஆகவே கல்வித் துறை மேம்பாடு குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.முன்பிள்ளை கல்வி முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளையின் கல்வி பராயத்தில் முன்பிள்ளை கல்வி மிகவும் முக்கியமானது.முன்பிள்ளை கல்வி ஆசிரியர்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய கொள்கையை வகுக்க வேண்டும். புதிய கல்வி மறுசீரமைப்பில் முன்பிள்ளை கல்வி தொடர்பில் கொள்கைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தீவிரமாக காணப்படுகிறது . நகர்புற பாடசாலைகளுக்கும், கிராமப்புற பாடசாலைகளுக்கும் இடையிலான வளபகிர்வு மேடும் பள்ளமுமாக காணப்படுகிறது. கல்வியில் சமத்துவத்தை பேண வேண்டுமாயின் வளங்கள் சமமான முறையில் பகிரப்பட வேண்டும்.

பாடசாலைகளுக்கு இடையிலான வளப்பற்றாக்குறை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளை சிறந்த பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு கடவுளிடம நேர்த்தி வைக்கிறார்கள். இந்நிலைமை மாற்றமடைய வேண்டும்.

அதேபோல் கிழக்கில் மஞ்சன்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று உள்ளது. அங்கு விவசாயம் தொடர்பான பாடநெறி காணப்படுகிறது. இந்த கல்லூரியின் தர சான்றிதழை என்.வி.க்யூ 5 மற்றும் 6 என்ற நிலைக்கு தரமுயர்த்துமாறு தொழிற்கல்லூரி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தெஹிவளை மீலாத் பாடசாலை பற்றி குறிப்பிட வேண்டும்.பிலியந்தலை கல்வி வலயத்தில் உள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையாக இந்த பாடசாலை காணப்படுகிறது.1952 ஆம் ஆண்டு இந்த பாடசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டிடமே இன்றளவில் காணப்படுகிறது.இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்ய உரிய கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமில் இருந்த பாடசாலை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த 56 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்

No comments: