News Just In

6/28/2025 05:51:00 PM

சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை


சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும், நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை


வாழைச்சேனை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குமாறும் நீதியான விசாரணைகளை நடத்துமாறும் கோரி அரசினை வலியுறுத்தி சனிக்கிழமை (28) பேத்தாழை வாழைச்சேனையில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவிக்கும் வகையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்றைய நிகழ்வில் முன்னாள் அமைச்சருக்கு விடுதலை வேண்டி பேத்தாழை மாவடி மாரியம்மன் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.

இதன்போது பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் நடவடிக்கையானது மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடம் பெறவுள்ளதாக கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.நிமல்ராஜ் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எமது தாய் நாட்டின் இறைமையும் தேசிய ஒருமைப்பாடும் ஆபத்துக்குள்ளாகி இருந்த வேளையில் அவற்றை மீட்டெடுக்க அவர் போன்றவர்கள் ஆற்றிய சேவைகள் இன்று மறக்கப்பட்டால் எதிர் காலத்தில் சிறுபான்மை இனங்களில் இருந்து இவ்வாறான தேச பக்தர்கள் எவ்வாறு தோன்ற முடியும் என்பது தேசத்தின் ஒருமைப்பாட்டை நேசிக்கும் சகலரும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவாகும்.

ஆகவே சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் அனைத்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடத்தப்படுவதற்கு ஆவண செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம் என ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பும் மகஜரில் மேற்படி விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments: