News Just In

4/05/2025 08:19:00 AM

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும்! - அரசுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை

இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் சீனா அதிருப்தியடையும்! - அரசுக்கு சரத் வீரசேகர எச்சரிக்கை




இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவரை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதில் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் உள்ளடங்கங்கள் என்னவென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும்.

தமிழ்நாடு சட்டசபையில் இலங்கையின் கச்சத்தீவை மீளப்பெற்றுக் கொள்வதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இந்தியாவுடனான பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிகாலத்தில் தான் விடுதலை புலிகள் அமைப்புக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

ஆகவே இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றார்.

No comments: