பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி!
பாடசாலை மாணவி ஒருவர் கடத்திச் செல்லப்படுவது போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
கண்டி - கெலிஓயா பிரதேசத்தில் நேற்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரமாக இரண்டு பாடசாலை மாணவிகள் நடந்து வரும்போது, அந்த வழியாக வந்து கருப்பு நிற வான் ஒன்றில் வந்தவர்கள் இரு மாணவியர்களுள் ஒருவரை வானில் உள்ளே தள்ளி கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
அந்த பகுதியின் ஊடாக பயணித்த மற்றுமொருவர் இதனை அவதானித்து உடனடியாக குறித்த மாணவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும், காப்பாற்றச் சென்ற குறித்த நபரையும் அதே வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும், கடத்தப்பட்ட மாணவி மற்றும் காப்பாற்றச் சென்ற நபர் ஆகிய இருவருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி கடத்தலுக்கான காரணம் வௌியானது
கண்டி - தவுலகல பகுதியில் வேனில் வந்து பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (11) நடந்த இந்தக் கடத்தலின் முக்கிய சந்தேகநபர், மாணவியின் தந்தையின் சகோதரிகளில் ஒருவரின் மகன் எனத் தகவல் வெளியாகியுள்ளதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவிக்கும் சந்தேகநபருக்கும் இடையில் திருமணம் செய்ய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்ததாகவும், ஆனால் பின்னர் மாணவியின் தந்தை தனது மறுப்பை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனைக்குரிய சூழ்நிலை காரணமாக சந்தேகநபர் மாணவியை கடத்திச் சென்றுள்ளமை பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், மாணவியை கண்டுபிடித்து சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவுலகல, ஹன்தெஸ்ஸ பகுதியில் குறித்த மாணவி தற்காலிகமாக வசித்து வந்த நிலையில், நேற்று (11) காலை தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தவுலகல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்று பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (12) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வேனின் சாரதி தவுலகல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய வேனின் சாரதி, கம்பளை, கஹடபிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, 19 வயதான மாணவியைக் கடத்திச் சென்ற சந்தேகநபரான இளைஞன், முதலில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், பின்னர் அவர் அதை 3 மில்லியனாகக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் மாணவியின் தந்தைக்குச் சொந்தமான வாகனத்தை கோரி, 200,000 ரூபாயை வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மாணவியின் தந்தை ரூ.50,000-ஐ சம்பந்தப்பட்ட கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: