ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் - செயற்திறனான முதுமைப் பருவம் எனும் தொனிப்பொருளில் மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து முதியோர்களுக்கான இந்த செயலமர்வு நடைபெற்றது.
அரச, அரச சார்ந்த நிறுவனங்கள், தனியார் பிரிவுகளில் தொழில் புரியும் அலுவலர்கள் ஓய்வுக்குத் தயாராகும்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைத்தல், சமூகமயமாதல், முதுமைப் பருவத்தினை செயற்றிறனாக எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களை இலக்காகக் கொண்ட இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஓய்வூதிய காலத்தில் உடலியல் உளவியல் நலம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான சுய கோவை தயார்படுத்தல், திட்டமிடப்பட்ட முதுமைப்பருவம் தொடர்பான தெளிவூட்டல்கள் உள்ளிட்ட விடயங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.சிறிதரன், தொழிற்துறை உத்தியோகத்தர் கே. கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற கல்வி உதவிப் பணிப்பாளர் எம். புவிராஜ் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டன.
இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான துஷியந்தி, தட்ஷாயினி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், சந்திரகலா கோணேஸ்வரன், உள்ளிட்ட பல அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments: