News Just In

12/13/2024 04:03:00 PM

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் திடீரென புத்தர்சிலை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது!

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் திடீரென புத்தர்சிலை
பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது முன்னாள்   நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம்




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வடக்கு கிழக்கை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளருமான கோ. கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்துத் வெளியிட்டுள்ள அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது. இது போன்ற சிறுபான்மைப் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர். அந்தவகையில் வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத கண்டனத்துக்குரிய நிகழ்வாகும்.

இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது. அந்தவகையில் கடந்த அரசாங்கத்தில் கூட வட மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளராக ஒரு சிங்களவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டபொழுது அவர், யாழ்ப்பாண வீதிகளில், சுற்றுவட்டங்களில் புத்தருடைய சிலையை நிறுவியதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பின் பிரகாரம் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படடதாக அறிந்திருக்கிறேன்.

அந்த வகையில் புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்கவேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள். இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் செயற்படுகின்றாரா என்ற கேள்வி மத்தியில் எழுந்திருக்கின்றது.

வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

வைத்தியசாலை நிருவாகம் உடனடியாக இவ்விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

No comments: