News Just In

4/07/2024 09:27:00 AM

நடுவீதியில் பொலிஸ் அதிகாரி முன்னிலையில் வான் சாரதியை தாக்கிய பேருந்து சாரதிக்கு நேர்ந்த கதி!




போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் முன்னால் வான் சாரதி ஒருவரை உதைத்து அவரை தாக்கிய பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பேருந்து சாரதி வான் சாரதியை உதைக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வானை விபத்துக்குள்ளாக்க முயற்சி

நோய்வாய்ப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு வானில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, வழி இலக்கம் ​​120 ஹொரணை - கொழும்பு பேருந்து ஒன்றுக்கு வழி விடாமல் சென்றதால் சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த வானை விபத்துக்குள்ளாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, ​​வீதியில் போக்குவரத்து பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அருகே தனது வானை நிறுத்திவிட்டு அதன் சாரதி இது குறித்து முறைப்பாடு செய்ய சென்ற போது, ​​சந்தேகநபரான பேருந்தின் சாரதி அந்த இடத்திற்கு வந்து வானின் சாரதியை எட்டி உதைத்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி முன்னால் அவர் இவ்வாறு தாக்கிய விதம் வாகனம் ஒன்றில் பொறுத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததால், தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, நேற்று பொலிஸில் முன்னிலையாகுமாறு பேருந்தின் சாரதிக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதனை தவிர்த்துள்ளார்.

அதன்படி, சந்தேகத்திற்குரிய பேருந்தின் சாரதியை பிலியந்தலை - மிரிஸ்வத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேலும் வழக்கு முடியும் வரை சந்தேகத்திற்கிடமான சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸ் பொறுப்பில் வைத்திருக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: