News Just In

4/30/2024 10:54:00 AM

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு!




ரதுபஸ்வெல கிராமத்தில் மூன்று பேர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடையக் காரணமாக இருந்த ராணுவ துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) வழங்கப்படவுள்ளது.

கம்பஹா, வெலிவேரிய அருகே அமைந்துள்ள ரதுபஸ்வெல கிராமத்தில் பிரபல வர்த்தகரும், பொதுஜன பெரமுனவின் தற்போதைய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவிற்குச் சொந்தமான ஹேலிஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த தொழிற்சாலையின் இரசாயனக் கழிவுகள் காரணமாக ரதுபஸ்வெல கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபட்டு, குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக தங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரக் கோரி ரதுபஸ்வெல கிராம மக்கள், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய போக்குவரத்து அமைச்சின் செயலாளராக இருந்த தம்மிக பெரேரா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச ஆகியோருக்கு இடையில் நிலவிய நெருங்கிய நட்பு காரணமாக ரதுபஸ்வெல ஆர்ப்பாட்டத்தை அடக்கி, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க ராணுவ படைப்பிரிவு ஒன்று அனுப்பப்பட்டது.
சரமாரியான துப்பாக்கிச் சூடு

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன தலைமையிலான குறித்த ராணுவப் படையணி, கோட்டாபயவின் உத்தரவின் பிரகாரம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக , சரமாரியான துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.

இதன் காரணமாக பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்து, ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமுற்றிருந்தனர்.




ராஜபக்‌ச அரசாங்கம் தோல்வியுற்று, நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன உள்ளிட்ட நான்கு ராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டனர்.



தம்மிக பெரேராவின் ஹேலீஸ் நிறுவன தொழிற்சாலையும் அங்கிருந்து அகற்றிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த ரதுபஸ்வெல சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(30) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: