News Just In

4/24/2024 03:21:00 PM

காத்தான்குடி குண்டுவீச்சு தாக்குதல்: திடீர் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடியினர்!




மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதல் மற்றும் கலவரங்கள் தொடர்பாக 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காத்தான்குடி இரும்பு தைக்கா பள்ளியில் கடந்த 2004 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காத்தான்குடி 6ம் குறிச்சி இரும்புத் தைக்கா பள்ளிவாசல் என அழைக்கப்படும் அல் ஹசனாத் பள்ளிவாசலில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரவு வேளையில் குண்டு தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இது தொ டர்பாக 20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை தொடர்பாக காத்தான்குடி பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.



இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றைய தினம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் உட்பட பள்ளிவாசலில் நிர்வாகத்தில் இருந்த சிலரை நேற்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணை இடம்பெறுவதாகவும் தெரிய வருகிறது.

காத்தான்குடி இரும்புத்தைக்கா பள்ளிவாசலில் 1 .11 .2004 ஆம் ஆண்டு ரமழான் மாதம் 16ம் நாள் அன்று இரவு தராவீஹ் தொழுகையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது.

காத்தான்குடியில் மார்க்கப் பிரச்சினை உக்கிரமாக நிலவிய காலகட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருந்தனர்.

இந்த நிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே நேரம் இந்த இரும்புத் தைக்கா பள்ளிவாசல் குண்டு வீச்சு சம்பவம் காத்தான்குடி பகுதியில் பெரும் மார்க்க கலவரங்களாக மாறியதோடு இதன் பின்னர் ஈமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு ஒன்றும் உருவாக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: