News Just In

3/13/2024 07:39:00 PM

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..?




அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமெனில் தற்போதைய நாடாளுமன்றம் மே13 ஆம் திகதி, ஆரம்பமாகும் வாரத்தில் கலைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜுலை 15 ஆம் திகதி தீர்க்கமான நாளாவதுடன் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும் காலப்பகுதியாகும்.

அக்காலப்பகுதியில் அதற்கான அறிவிப்பை ஆணைக்குழுவினர் விடுக்கவேண்டும். மேலும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் பற்றியும் பேசப்படுகின்றது.

அத்தோடு ஜுலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டுமெனில் மே 13 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மே நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் ஜுலை மாத நடுப்பகுதிக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

அதேவேளை, எந்தவொரு காரணத்துக்காகவும் அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைக்க முடியாததுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெறுகின்றது எனக்கூறியும் அதனை செய்யமுடியாது.

ஜுலை நடுப்பகுதியில் கட்டாயம் அறிவிப்பை விடுக்கவேண்டும் அடுத்தது அதிபர் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் கூறமுடியாது.

உள்ளாட்சி சபைத்தேர்தலின் போது கையாண்ட இந்த விளையாட்டு அதிபர் தேர்தலின்போது எடுபடாது ஏனெனில் பாதீட்டில் 10 பில்லியன் ரூபா அதிபர் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டால் கூட அதிபர் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அதற்காக பயன்படுத்த முடியாது மேலும் அவ்வாறு பயன்படுத்திவிட்டு அதிபர் தேர்தலை நடத்த நிதி இல்லை என கூறமுடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.



No comments: