
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சென்ற நிலையில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் சடலம் புதன்கிழமை இரவு 29.11.2023 ஏறாவூர் - களுவன்கேணி கடலில் கண்டெடுக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் எல்லை வீதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (வயது 15) என்பவரே செவ்வாய்க்கிழமை 28.11.2023 மாலை கடலில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்தார்.
மூழ்கிய சிறுவனைக் கண்டு பிடிக்க கடலில் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டபோது புதன்கிழமை இரவு 7.00 மணியளவில் களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதன் பின்னர், சடலம் முன்னதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சிறுவன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னராகவே பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து புன்னைக்குடாக் கடலுக்குச் சென்று நீராடிக் கொண்டிருக்கும்போது கடலில் மூழ்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments: