News Just In

9/08/2023 04:53:00 PM

சர்ச்சைக்குரிய குரல்பதிவுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவும்: சாணக்கியனிடம் நீதியமைச்சர்!




ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தம்மிடமுள்ள சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் உள்ளிட்ட சாட்சியங்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கோரியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 ஆவணப்படத்தின் தகவலாளரான ஹன்சீர் அசாத் மௌலானாவின் குரல் பதிவு ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றைய தினம் (07.09.2023) நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துறை சந்திரக்காந்தன் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டமையின் பின்னணியில் பல விடயங்கள் இருப்பதாக குறித்த குரல் பதிவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் சிறந்த முறையில் நீதியை நிலைநாட்டியுள்ளது. பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 79 சந்தேகநபர்களுக்கு எதிராக 42 குற்றப்பத்திரங்கள் இதுவரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகள் பாகுபாடின்றி சுயாதீனமான முறையில் நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை ஹன்சீர் அசாத் மௌலானா என்ற நபர் செனல் 4 தொலைக்காட்சியில் வெளிப்படுத்தாத குரல்பதிவு, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ளது. அத்துடன் அவர் அதனை நாடாளுமன்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்படியானால் ஹன்சீர் அசாத் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு விசேட குரல்பதிவை அனுப்பியுள்ளார். இந்த நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் உள்ள சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: