News Just In

9/08/2023 03:03:00 PM

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் புஷ்பரட்ணம் இணைவு : யாழ் பல்கலை மருத்துவ மாணவர்களும் வருகை




முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மற்றும், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணிகளான கேஸ்.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராச ஆகியோர் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந் நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகளில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் இணைந்துகொண்டுள்ளார்.
குறித்த மனிதப்புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கிச் சன்னங்கள் எனச் சந்தேகிக்கப்படும் உலோகேத்துண்டுகள், துப்பாக்கிச்சன்னங்கள் துளைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடையப்பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் குறித்த அகழ்வின் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன.அந்தவகையில் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் வருகைதந்துள்ளனர்.

மேலும் குறித்த இடத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












No comments: