கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதற்கிணங்க விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கென பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,68, 625 பேரும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் 55, 288 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அந்த வகையில் மொத்தமாக 03 இலட்சத்து 23 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தில் இந்த பரீட்சைக்காக 03 இலட்சத்து 31 ஆயிரம் பேர் தோற்றினர். கடந்த வருடத்தை போன்று சமமான மாணவர்கள் இம்முறையும் விண்ணப்பித்துள்ளர்.
இம்முறை உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி ஜனவரி மாதத்தில் நடத்துமாறு சில தரப்பினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எனினும், அவ்வாறு காலதாமதம் செய்தால் மேலும் ஒரு மாத காலத்திற்கு பாடசாலை விடுமுறை வழங்க வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மிக விரைவாக பரீட்சையை நடத்தி பெறுபேறுகளை வழங்கி பல்கலைக்கழக நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிக்குமாறு பெற்றோரும் மாணவர்களும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கல்வி அமைச்சு பகீரத பிரயத்தனங்களுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மற்றும் பெறுபேறுகள் வெளியிடுதலை மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்டதாக கல்வி யமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
No comments: