யாழில் சிறிலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே காணிகளை விடுவிப்பது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான குறித்த கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், அதிபர் செயற்குழு பிரதானி சாகல ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரையும் காவல்துறையினரையும் உள்ளடக்கிய குறித்த குழு விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
பாதுகாப்பு தரப்பினரையும் காவல்துறையினரையும் உள்ளடக்கிய குறித்த குழு குறுகிய காலப் பகுதிக்குள், அதிகபட்சமாக விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, வலி வடக்கு பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அரசுடமையாக்குவது தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்ட சுமார் 6000 ஏக்கர் காணிகளில் சுமார் 3000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், காணி விடுவிப்பு தொடர்பான தெளிவூட்டல்களை மக்களுக்கு வழங்கி, மக்களின் ஒத்துழைப்புடன் காணிகளை விடுவிப்பதற்கு தேவையான காணி அளவீடுகளை மேற்கொள்வதற்கும், நலன்புரி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு வீடுகளை அமைத்து மீள்குடியேற்றுவதற்கும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments: