News Just In

2/26/2023 08:19:00 AM

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: ரணில் விடாபிடி! மகிந்தவின் கடுமையான நிலைப்பாடு!

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகளுடன் காணப்படும் தரப்பினரும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

மகிந்தவின் தேர்தல் தொடர்பான இந்த நிலைப்பாடு, ரணிலுக்கான அரசியல் எதிர்ப்புக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும்,எமக்கும் தற்போது அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவர் நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை வழங்கியதை மறுக்க முடியாது.

வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை அவர் கடைப்பிடித்தார்.

தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல, ஆகவே அவருக்கு தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அல்ல எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அவர் படுதோல்வி அடைவது உறுதி, 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் அவரை முழுமையாக புறக்கணித்தார்கள்,ஆகவே நாட்டு மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யமாட்டார்கள்.

வெற்றிப்பெறுவோம் என்ற நிலை காணப்படும் போது தேர்தலை நடத்துவதும்,தோல்வியடைவோம் என்ற நிலை காணப்படும் போது தேர்தலை பிற்போடுவதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கையாக காணப்படுகிறது.

தேர்தல் நடத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிப்பு உத்தியோகபூர்வமற்றது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அரசியலமைப்பை மலினப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஜனநாயகம்,அரசியலமைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி நாடு செயல்படுகிறதா என்பது தற்போது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அரச முறை கடன்களை செலுத்துவதை இடைநிறுத்தி,அந்த நிதி ஊடாகவே எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

மறுபுறம் வரி அதிகரிப்பு ஊடாக அரச நிதி அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. இவ்விரு தீர்மானங்களினால் நடுத்தர மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் பெறவில்லை என கூறியுள்ளார்.

No comments: