News Just In

1/24/2023 11:59:00 AM

தினேஷ் ஷாப்டர் படுகொலை - பின்னணியில் அரசியல் தலையீடு! சட்டத்தரணி வெளியிட்ட தகவல்





பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலும், அதற்குப் பின்னால் அரசியல் கைகள் இருப்பதால் உரிய விசாரணைகள் நடைபெறவில்லை என்று சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கான மூல காரணம் இதுவரை வெளிக்கொணரப்படவில்லை.இந்த கொலை மற்றும் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் கைகள் உள்ளது.

லசந்த விக்ரமதுங்க மற்றும் கீத் நொயர் மரண விவகாரம் இதற்கு சிறந்த உதாரணம்,லசந்த-கீத் நொயருக்கு என்ன நடந்தது என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.ஏனென்றால் அவர்கள் கொலையில் அரசியல் தலையீடு உள்ளது.ஷாப்டருக்கும் அதே நிலை தான் வரும்.

தினேஷ் ஷாப்டர் கொலை பின்னணியில் அரசியல் கை உள்ளது. இதன் காரணமாக உரிய விசாரணைகள் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 175 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: