News Just In

1/24/2023 11:53:00 AM

தென்னிலங்கையை பரபரப்பாக்கிய இளம் காதலர்களின் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்




தங்காலையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் நேற்று முன்தினம் இளம் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர்.

இந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலில் பல வெளிநாட்டவர்களும் தங்கியிருந்ததாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவயதில் இருந்து இந்த ஹோட்டலில் வளர்ந்த 22 வயது இளைஞனும், அவனது காதலி என்று கூறப்படும் 17 வயது யுவதியமே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் ஊழியர் நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் அம்பலாந்தோட்டைக்கு சென்று தனது காதலியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹோட்டல் தொழிலாளியின் தாய் நகர சபை ஊழியராகும். அவரது தந்தை குறித்த எந்த தகவலையும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் சிறுவயதில் இருந்து இந்த ஹோட்டலில் தங்கி வளர்க்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞன் பாடசாலை செல்லவில்லை, பிறப்புச் சான்றிதழும் இல்லை. அதன்காரணமாக அவரால் தேசிய அடையாள அட்டையை கூட தயார் செய்ய முடியவில்லை.

இந்த இளைஞன் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் காதலியுடன் பழகியுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்த போதிலும், அடையாள அட்டையோ, பிறப்புச் சான்றிதழோ இல்லாததால் அந்த இளைஞனால் திருமணம் செய்ய முடியவில்லை.

அந்த இளைஞன் தனக்கான பிறப்புச் சான்றிதழைத் தயாரிக்க முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணையில், அந்த இளைஞன் பிறந்த மருத்துவமனை கூட தாயாருக்கு நினைவில் இல்லை என்ற உண்மைகள் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ் திருமணத்திற்கு தடையாக இருந்தமையால் இந்த இளைஞன் மன உளைச்சலில் இருந்ததாக ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

திருமணம் செய்துக் கொள்ள முடியாதென்ற அச்சத்திலேயே உயிரை மாய்த்திருக்கலாம் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: