News Just In

11/09/2022 07:40:00 PM

அவுஸ்திரேலியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாக பிரச்சினை காரணமாக இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வுபெற்றுத் தருமாறு கோரிய, அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த (பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த) ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவரடங்கிய கும்பலால் “இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா” எனக் கேட்டு அவர் மீது சரமாரியாக  வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டுத் தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகிய அவர், தற்பொழுது யாழ். போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் 42 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலய நிர்வாக பிரச்சினையினை வடக்கு ஆளுநரிடம் முறையிட்டவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: