News Just In

9/13/2022 09:36:00 PM

காத்தான்குடியில் பெண்களுக்காக உள நல நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைப்பு!






- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடியில் உள்ள பெண்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வந்த உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஐவெயார் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் தெரிவித்தார்.

நியுஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்நிலையம் செவ்வாய்க்கிழமை 13.09.2022 வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் (Brett Shields – Security and Migration Officer – New Zealand High Commission Colombo) காத்தான்குடி பிரதேச செயலாளர் எம். உதயஸ்ரீதர் காத்தான்குடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் உட்பட சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண் செயற்பாட்டாளர்கள், ஐவெயார் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய ஐவெயார் நிறுனத்தின் பணிப்பாளர் அனீஸா, காத்தான்குடியில் உளநல ஆற்றுப்படுத்தல் நிலையம் மட்டுமல்ல பெண்களுக்காக ஆற்றப்பட வேண்டிய பல சேவைகள் காத்துக் கிடக்கின்றன. காத்தான்குடியிலுள்ள ஒட்டு மொத்த சனத் தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருக்கும் நிலையில் இப்பிரதேசத்தில் பல்வேறு வகைப் பாதிப்பிற்குள்ளான பெண்களுக்காக ஒரு காப்பகம் தேவை, பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கான பாதுகாப்புடன் கூடிய அமைவிடம், பெண்களுக்கான விழிப்புணர்வூட்டல் அறிவூட்டல் நிகழ்ச்சிகளை நடத்த நிலையங்கள், ஆரோக்கிய நிலையங்கள், போன்றவற்றின் தேவைப்பாடுக்ள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் இவைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஒரு வரப்பிராசாதமாக இருப்பதோடு பெண்களின் உடல் உள ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் இவை உதவும்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுயுடன் தான் ஐவெயர் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் கூடுதலான பெண்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பதும் எங்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது.” என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி நியூஸிலாந்து உயர் ஸ்தானீகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் (Brett Shields – Security and Migration Officer – New Zealand High Commission Colombo) 5 மில்லின் மாத்திரமே சனத்தொகையைக் கொண்ட நியூஸிலாந்து நாடு இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவைக் கொண்டது. அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகினறார்கள். ஏற்கெனவே எமது நியூஸிலாந்து நாட்டில் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் வசிக்கின்றார்கள். இன்றைய நிகழ்வில் கலந்து பங்கெடுத்த இளம் பெண்களில் பலரை எதிர்காலத்தில் நியூஸிலாந்தில் சந்திப்பதிலும் நாம் மகிழ்ச்சியடைவோம்” என்றார்.


No comments: