News Just In

3/08/2022 06:41:00 AM

திடீரென அதிகரித்த கோழி முட்டையின் விலை!

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது.

கோழி தீவனங்களுக்கான விலை அதிகரிப்பே முட்டையின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளமைக்கு பிரதான காரணம் என அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப் பண்ணை உரிமையாளர் எம்.ஏ.எம். தாஹிர தெரிவித்துள்ளார்.

முன்னர் 3,200 ரூபாவுக்கு கிடைத்த முட்டைத் தீன் (கோழிகளுக்கு முட்டையிடும் பருவத்தில் வழங்கப்படும் தீன்) தற்போது 6,800 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தாஹிர் தெரிவிக்கின்றார்.

கோழி தீவனத்துக்குரிய பிரதான உள்ளீடுகளில் ஒன்றான சோளத்துக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், முன்னர் 65 ரூபாவுக்குக் கிடைத்த ஒரு கிலோ சோளம், தற்போது 125 ரூபா வரையில் விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கோழி தீவனகளுக்குரிய உள்ளீட்டுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக் காரணமாக, கோழித்தீன்களின் தரம் குறைவடைந்துள்ளது. அவ்வாறு தரம் குறைந்த தீன்களை கோழிகளுக்கு வழங்கும் போது, முட்டைகள் இடுகின்ற எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படுகிறது," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1,000 கோழிகள் உள்ள பண்ணையொன்றில் சாதாரணமாக 850 முட்டைகள் கிடைத்து வந்ததாகவும், தற்போது தரம் குறைவான தீன்களை வழங்குவதால் சுமார் 650 முட்டைகளையே பெற்றுக் கொள்ள முடிவதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர் தாஹிர் கூறினார்.

No comments: