சுகாதார பணியாளர்கள் மத்தியில் கோவிட் பெருந்தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தாதியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமும் சுகாதார அமைச்சும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியுள்ளதாக தாதியர் ஒன்றியத்தின் தலைவர் எச்.எஸ்.எம்.பி. மெதிவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று கர்ப்பிணிகள் உள்ளடங்களாக 60 தாதியரும், 150 மருத்துவர்களும் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் உள்ளிட்ட அனைவரையும் பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.கோவிட் காரணமாக ஏற்கனவே அரசாங்க சேவைகளில் காணப்பட்ட வரையறைகளை நீக்கி, வழமையான சேவையை அரசாங்கம் அறிவித்திருந்தது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் சுகாதாரப் பணியாளர்கள் அபாயங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டுமென கோரவில்லை எனவும், பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமெனவும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.
No comments: