News Just In

1/18/2022 06:19:00 AM

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி; 5 பேர் வைத்தியசாலையில்!

அம்பாறை-தமன பிரதேசத்தில் கார் மற்றும் லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தை சேர்ந்த 8 பேர் வெள்ளிக்கிழமை கொழும்பைநோக்கி பயணத்தை மேற்கொண்டு சம்பவதினமான நேற்று (ஞாயற்றுக்கிழமை) ஊர் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளையில் சுமார் மாலை 6.00 மணியளவில் அம்பாறை-தமன பிரதேசத்தில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

சம்மாந்துறை மலையடி கிராமம் 01 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் ஓரே குடும்பத்தை சேர்ந்த கொழும்புதனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இப்றாலெப்பை முகம்மது ஜெசீல் (வயது-45), சம்மாந்துறை நெய்னாகாடு அல் அக்சா வித்தியாலய ஆசிரியர் சுலைமாலெப்பை பிரோஸா (வயது 42), 4வயதுடைய பிள்ளை என மூவர் மரணித்துள்ளதாக அறிய முடிகிறது. அதே குடும்பத்தை சேர்ந்த இருவரும் கல்முனைக்குடியை சேரந்த மூவரும் மொத்தமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இச் சம்பத்தில் சம்மாந்துறை கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் துக்க நிலை உருவாகியுள்ளதை காணமுடிகிறது.

ஐ.எல்.எம் நாஸிம் ,நூருல் ஹூதா உமர்

No comments: