பணத்தைக் கண்டெடுத்து உரியரைத் தேடி ஒப்படைத்தவரை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கருணாகரன் மனதாரப் பாராட்டியதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றது.
பிரதேச கலை இலக்கிய விழாவும் இனசமதி மலர் வெளியீடும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் அலிகார் தேசியக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாலை 24.12.2021 நடந்தபோது நிகழ்ச்சியின் மத்தியிலே இந்த நெகிழ்ச்சியூட்டும் கௌரவிப்பு இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய மாவட்டச் செயலாளர், இது கலாசார பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த முன்னுதாரணம் என்றார்.
நிகழ்வில் ஏறாவூரைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான இஸ்மாயில் கபீர் (வயது 33) என்பரே கௌரவிக்கப்பட்டார்.
இவர் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.எஸ்.ஆர். சிவகுமார் என்பவர் சமீபத்தில் தன்னையறியாமல் தெருவில் தவற விட்டுச் சென்ற 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கண்டெடுத்து உரியவரை தேடிச் சென்று ஒப்படைத்திருந்தார்.
இதற்காகவே கலாசார விழாவில் சிறந்த கலாசாரப் பண்பாடுகளுக்காக கபீர் அனைவராலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச. நவநீதன், மாவட்ட செயலக கலாசார இணைப்பானர் ரீ. மலர்ச்செல்வன் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா பிரதேச திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா கணக்காளர் தர்மினி வினோதன் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ. றஹீம் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சி. ஜெய்னுலாப்தீன் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் நிருவாக செயலாளரும் ஹாபிழ்கள் ஒன்றியத்தின் ஆலோசகருமான கலாபூஷணம் எம்.எச்.எம். புஹாரி உட்பட இன்னும் பல எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஆசிரியர்கள்; அதிபர்கள், மாணவர்கள் முன்னிலையில் பணத்தைக் கண்டெடுத்து அதனை உரியவரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டிச் சாரதியான ஏறாவூரைச் சேர்ந்த இஸ்மாயில் கபீர் பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: