News Just In

12/30/2021 09:53:00 PM

கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் - வியாழேந்திரன் தெரிவிப்பு!

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் இதனை நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் (கட்டிடதொகுதி) அமைக்கப்பட உள்ளதென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கல்குடா வலயத்திற்குட்பட்ட இறால் ஓடை வள்ளுவர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், நவீனமயப்படுத்தலும் இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்தை நோக்கியதான ஒரு மாற்றம் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த மாற்றம் வகுப்பில் முதலாம் தரத்தைப் பெறும் மாணவருக்கும் வகுப்பில் இறுதியாக வரும் மாணவருக்கு உள்ள திறமைகளை இனங்கண்டு அந்தத் துறையில் மாணவர்களை முன்னேற்றம் ஏற்படுத்தவே மாற்றங்கள் வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் வெறும் பரீட்சைகள் மாத்திரம் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது, ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் துறை சார்ந்து வழிகாட்டலுடன் நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும். இது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாக இருக்கின்றது. ஒவ்வொரு மாணவனும், மாணவியும் தனது வாழ்க்கையில் 24000 மணித்துளிகள், 13 வருடத்தில் பள்ளியில் ஆசிரியர்களுடன் கல்வியறிவை பெற்று பயன்பெறுகின்றார்கள். 

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தான், மாணவர்களது, இளமைக்காலத்தை சிற்பமாக செதுக்கி, அவர்களது தனித்திறனை கண்டுணர்ந்து, அதை ஊக்கப்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறார்கள். ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, உயர் நிலை பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மேல் நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களது ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், ஆசிரியர்கள் தங்களது அறிவால், வாழ்வால், நல் ஒழுக்கத்தால், மாணவர்களை ஈர்த்து, மாணவர்கள் தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள். ஆக மாணவர்களது முதல் நம்பிக்கை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தான் என்பதே உண்மை.

ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு செல்லும்போது அந்த தேர்வில் 3 லட்சம் மாணவர்கள் மாத்திரமே உயர்தர வகுப்புகளுக்கு தெரிவாகின்றனர். ஏனையோர் கல்வி நிலையை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அரசாங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதும் அவை சிறந்த கொள்கை திட்டத்தின் கீழ்பின்தங்கிய பிரதேசங்களை விஸ்தரிக்க படவில்லை எதிர்காலத்தில் அனைத்து மாணவரும் ஏதேனும் ஒரு துறையில் அரசாங்கத்தின் உதவியோடு பட்டப்படிப்பு வரை கல்வியை தொடர வழி வகுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்த உயர் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்படுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வழிகாட்டலுடன் மாணவர் சமுதாயத்தினருக்கு தொழிற்கல்வி மற்றும் உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆர்வமுள்ளவர்களுக்கு மின்னியல் இலத்திரனியல் பொருளியல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேம்படுத்த கல்வி அமைச்சின் உயரிய நோக்கத்துடன் உயர் தொழில்நுட்ப பீடம் (கட்டிட தொகுதி) அமைக்கப்பட உள்ளது. இந்தக் கற்கை நெறிகள் ஊடாக
எதிர்காலத்தில் மாணவர் சமுதாயத்தினருக்கு சர்வதேச ரீதியிலான உயர் தொழில்நுட்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வித் தகைமை உடைய சமுதாயமாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உயர் தொழில்நுட்ப பீடம் மூன்று மாடி கட்டிட தொகுதி முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனூடாக மாணவர் மத்தியில் மின்னியல் இலத்திரனியல் , பொறியியல் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பத் திறனை கல்வி நடவடிக்கைகளுடன் மேம்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இந்த கற்கை நெறியின் ஊடாக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் பல தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது. 

தற்போது உள்ள அரசாங்கத்தினால் 25 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இந்த உயர் தொழில்நுட்ப பீடத்தின் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ் வேலைத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நான்கு பாடசாலைகள் உள்வாங்கப் பட்டுள்ளதுடன் அதில் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒரு பாடசாலையும் அம்பாரை மாவட்டத்திற்கு இரண்டு பாடசாலையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேசசெயலாளர் பிரிவின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலையும் தொழில்முறை கல்விக்காக உயர் தொழில்நுட்ப பீடத்தை அமைப்பதற்காக கல்வி அமைச்சின் ஊடாக அனுமதி கிடைத்துள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

No comments: