News Just In

12/20/2021 06:54:00 AM

ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் கொலை மிரட்டல் : வழக்கை வாபஸ் பெற கோரி அச்சுறுத்தல்!

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி (சக்தி TV நியூஸ் பெஸ்ட்) ஒன்றின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிவரும் பாரூக் முஹம்மட் சஹீர் அஹமட் ஆகிய என் மீது அக்கரைப்பற்று பொலிசாரால் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக பாரூக் முஹம்மட் சஹீர் அஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தனது பிரத்தியோக வேலை ஒன்றுக்காக அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருக்கின்ற முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் கடந்த 18.12.2021 தான் மோட்டார் சைக்கிளில் இரவு 8.35 மணியளவில் பயணம் செய்த போது EP KF 0842 இலக்கமுடைய காரின் அருகில் நின்றிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கட்டளையிட்டு கை சைகை ஊடாக கேட்டுக் கொண்டார். உடனே நான் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்தினேன். அதன் பின்னரே அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதையும் அவர் சிவிலுடையில் வந்துள்ளதையும் அவதானித்தேன். உடனே அவர் கடும் கோபத்துடன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் நான் வழக்கு பதிந்துள்ளதாகவும் நான் பதிந்துள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அப்படி இல்லாவிட்டால் என்னை இந்த மையவாடிக்கு வெகுவிரைவில் புதைப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் நீ யாருடன் மோதுகிறாய் என்று உனக்கு தெரியாதா? வருகின்ற வாரத்துக்குள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்றும் இல்லாது போனால் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் நீ இடம் பிடிப்பாய். இல்லாது விட்டால் உயிருடன் புதைக்கபடுவாய் என்று அச்சுறுத்தி விட்டு சென்றார்.

இந்த சம்பவம் கடந்த 02.09.2021 அன்று செய்தி ஒன்றை சேகரிப்பதற்காக எனது வீட்டில் இருந்து வெளியில் வந்து வீட்டுக்கு முன்னால் செய்தி சேகரிக்க தயாராகும்போது வீதியால் சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு என்னை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி காயப்படுத்தி இழுத்துச் சென்ற காட்சிகள் செய்திகளில் வெளிவந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக மனித உரிமைகள் மீறல் விசாரணை வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளேன். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

மாளிகைக்காடு நிருபர்

No comments: