News Just In

12/13/2021 08:17:00 PM

மட்டக்களப்பில் குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதாகவும், குளங்களின் நீர் மட்டமும் அதிகரித்து உள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(13) காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 78.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது, மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குப்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதி, றாணமடு மாலையர்கட்டு பிரதான வீதி, றாணமடு – 16 ஆம் கிராம பிரதான வீதி, ஆனைகட்டியவெளி சமிளையடி வீதி, உள்ளிட்ட பல வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், 32அடி கொள்ளளவுடைய நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் தற்போது 22அடி 5 அங்குலமாகவும், 17கொள்ளளவுடைய தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 14 அடி ஆகவும் உயர்ந்துள்ளது. அத்துடன், 33அடி 0அங்குலம் கொள்ளளவுடைய உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 27அடி 7அங்குலமாகவும், 15அடி 8அங்குலம் கொள்ளளவுடைய உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் தற்போது 13அடி 3அங்குலமாகவும், 19அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 9அங்குலமாகவும், 11அடி 6அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 10அடி 6அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், 12அடி 0 அங்குலம் கொள்ளளவுடைய கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடி 3 அங்குலமாகவும், 15அடி 5அங்குலம் கொள்ளளவுடைய வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் தற்போது 14அடி 5 அங்குலமாகவும், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7அடி 1அங்குலமாகவும்; உயர்ந்துள்ளதாகவும் அக் குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள களுகல் ஓயாவின் 2 வான்கதவுகள் 4 அங்குலம் அளவில் திறக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து வெளியேறும் நீர் நவகரிக் குளத்திற்கு வந்து சேர்வதாகவும், பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: