News Just In

12/25/2021 12:47:00 PM

பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாதோருக்கு பெற்றுக் கொடுக்கும் சேவை



எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பு பதிவு, திருமண பதிவு, இறப்பு பதிவு என்பவற்றினை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலில் நடமாடும் சேவை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி கிராம சேவகர் பிரிவில் பிறப்பத்தாட்சிப் பத்திரம் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியவர்களுக்கு பிறப்பத்தாட்சிப் பத்திரம் நடமாடும் சேவையூடாக வழங்கப்பட்டது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள வாகனேரி பிரிவிற்கான நடமாடும் சேவையும், பிறப்பத்தாட்சிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் வாகனேரி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.

இதில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், உதவி மாவட்ட பதிவாளர் இ.சசிகுமார், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகாத்தர் வீ.குகதாசன், பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.ஆர்.தாசிம், கிராம சேவை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், உளவளத்துணை உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிதாக பிறப்பினை பதிவு செய்வதற்காக வருகை தந்த சுமார் 57 விண்ணப்பதாரர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 42 பேருக்கான பிறப்பத்தாட்சிப் பத்திரமும் வழங்கப்பட்டது.

சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் உறுப்புரை 07 இன் பிரகாரம் ஒரு பிள்ளை தனது பிறப்பினை பதிவு செய்து கொள்வதற்கும் அதற்கான தேசியம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது என கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.







No comments: