News Just In

11/11/2021 06:53:00 AM

விரட்டியடித்த பின்னர் ஏன் மீண்டும் ஆட்சியில் அமர்த்தினீர்கள்? மக்களிடம் ஜனாதிபதி கேள்வி!

எங்களை விரட்டியடித்து விட்டு பின்னர் மீண்டும் ஏன் ஆட்சியில் அமர்த்தீனீர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தடவை விரட்டியடித்த அரசியல்வாதிகளை மக்கள் ஏன் மீண்டும் ஆட்சியில் அமர்த்துகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்போதைய எதிர்க்கட்சி சரியான முறையில் ஆட்சி செய்யாத காரணத்தினால் மக்கள் தம்மை ஆட்சி பீடம் ஏற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளின் பின்னர் எதிர்க்கட்சியினர் இதுவரையில் ஆட்சி நடாத்தாதவர்கள் போன்று நடந்து கொள்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாமோ தமது அரசாங்கமோ மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறியிருந்தால் அடுத்த தடவை வாக்களிக்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

புதிய முகங்களை தேடுமாறும், முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாதவர்களை மீண்டும் மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்பது தெரியவில்லை என்ற போதிலும் அதுவே யதார்த்தம் என தெரிவித்துள்ளார். ஒரு தடவை எங்களை விரட்டியடித்த நீங்கள் மீண்டும் எங்களை ஆட்சி பீடம் ஏற்றுகின்றீர்கள் அது ஏன் என புரியவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



No comments: