ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் அதன் தலைவர் நியமனம் தொடர்பில் பிரதமருக்கு இணக்கம் இல்லை. அதனால்தான் அதுதொடர்பில் அநுரகுமார திஸாநாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கால் மலுப்பிச்சென்றார் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து பலரும் பேசிவருகின்ற பிரச்சினையாகி இருக்கின்றது. அதனால் இதுதொடர்பாக அநுர குமார திஸாநாயக்க இந்த சபையில் பிரதமரிடம் பல கேள்விகளை கேட்டிருந்தார். குறிப்பாக அந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தலைவர் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார் என கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், அரசியலமைப்பு திருத்தத்துக்காக நியமிக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்பாக தெரிவித்துவிட்டு கேள்வியில் இருந்து நலளுவிச்சென்றார்.
அரசியல் அனுபவம் உள்ள பிரதமருக்கு ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பாகவும் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தலைவர் தொடர்பாகவும் இணங்க முடியாது என்பது எங்களுக்கு விளங்குகின்றது. என்றாலும் அதுதொடர்பில் பதில் அளிக்க முடியாத நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டிருக்கின்றார் என்பதும் தெளிவாகின்றது. அத்துடன் ஒருநாடு ஒருசட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமனத்தால் பிரதமரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றார்.
அதேபோன்று கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும்போது அதற்கு பாரிய எதிர்ப்பு ஏற்பட்ட சந்தப்பத்திலும் பிரதமர் அதற்கு ஒரு நிவாரணம் வழங்கும் வகையில் அறிவிப்பொன்றை விடுத்த சந்தர்ப்பத்திலும் அதற்குக்கூட இந்த நாட்டின் பிரதானி ஜனாதிபதி இடமளிக்காத நிலையை நாங்கள் இதற்கு முன்னர் கண்டோம். அதனால் இவ்வாறானதொரு நிலைமையே தற்போது நாட்டில் இடம்பெறுகின்றது என்றார்.
No comments: