நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார் .
இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வுகூறப்படுகின்றது. இதனை தடுப்பதற்கான வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.
ஆனால் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு இராணுவத்துக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விடுதலைப்பு புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்ற நிலையில் எனவே, யாருடன் போரிடப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன், பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
No comments: