News Just In

10/22/2021 06:58:00 AM

அநுராதபுர சிறையிலிருக்கும் எட்டு அரசியல் கைதிகளையும் வடக்கு, கிழக்கு சிறைகளுக்கு உடனடியாக மாற்ற நீதிமன்றம் உத்தரவு


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், சட்ட மா அதிபரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டு உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (21) உத்தரவிட்டது.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைத்துள்ள எட்டு அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வாதங்களை செவிமடுத்த பின்னர் அம்மனுவை விசாரணைக்கு ஏற்றே, உயர் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய சம்பவம் ஊடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, குறித்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நேற்று  2 ஆவது தடவையாக பரிசீலனைக்கு வந்தது.

நீதியரசர் காமினி அமரசேகர தலைமையிலான நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே பரிசீலிக்கப்பட்டது.

இதன்போதே உயர் நீதிமன்றம் மேற்படி உத்தர்வினை பிறப்பித்தது. இதன்போது மனுதாரர்களான அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை அனுராதபுரம் சிறையிலிருந்து உடனடியாக வடக்கு, கிழக்கின் ஏனைய சிறைகளுக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தர்விட்டது.

அத்துடன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பில் மன்றில் விடயங்களை முன் வைக்குமாறு, மனுவின் பிரதிவாதிகளான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

இதன்போது மனுதாரர்களான அரசியல் கைதிகளுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் விளக்கங்களை முன் வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில், சிறைக் கைதிகளின் உறவினர்களிடம் கவலை தெரிவிப்பதாக நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் கவலை வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அவர்களை வடக்கு, கிழக்கில் உள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்றும் இடைக்கால உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் கோரினார்.

இதன்போது பிரதிவாதிகளில் ஒருவரான சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ குணதிலக,

' மனுதாரர்களில் இருவர் கொழும்பு சிறைக்கு மாறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார். எவ்வாறாயினும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கைதிகளை யாழ். சிரைக்கு மாற்ற வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் ஊடாக தெரியபப்டுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களை வேறு சிறைகளுக்கு மாற்றுவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ரஜீவ் குணதிலக குறிப்பிட்டார்.

இதனையடுத்தே, 8 அரசியல் கைதிகளையும் வடக்கு கிழக்கின் பொருத்தமான சிறைகளுக்கு மாற்றவும், லொஹான் ரத்வத்த தொடர்புபட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மனுவை எதிர்வரும் 2022 மாசி மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தது.



No comments: