ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களினால் முன்மொழியப்பட்ட சேதனப் பசளை உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அக்கரைப்பற்று பிரதேச சபையின் திண்மக் கழிவுகளை உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் என்று பிரித்து சேகரிப்பதற்காக உரப்பை பாவனை அறிமுக நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரப்பைகள் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தலைமையில் சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் செயலாளர் எல்.எம். இர்பானிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர், எமது பிராந்தியத்தில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக குப்பைகளை இரண்டு வகை படுத்துவதற்காக இரண்டு நிறங்களில் உரப்பைகள் இன்று முதல் மக்களின் பாவனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த உரப்பைகளை மக்கள் நேரடியாக பிரதேசசபை நிர்வாகத்தினரிடம் ஒரு உரப்பைக்கான நிர்ணய விலை 50 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்தார்.
எதிர் வருகின்ற காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மக்களும் உரப்பைகளில் குப்பைகளை பிரித்து வழங்குமாறும் இல்லாதபட்சத்தில் குப்பைகள் எமது வாகனத்தில் ஏற்றுவதற்கு அனுமதிக்கப் படமாட்டாது. உலகளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் திண்மக்கழிவகற்றல் மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக காணப்படுவதனால் எமது பிராந்திய மக்கள் அக்கரைப்பற்று பிரதேச சபையுடன் ஒருமித்து பயணிக்கக்கூடிய மக்கள். எனவே எங்களுடைய அறிவுறுத்தல்களை பின்பற்றி சிறப்பாக ஒரு முன்மாதிரியான மக்களாக திகழ்வார்கள் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டினார்.
No comments: