News Just In

7/17/2021 12:45:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் 25 வயது இளம் போதைப்பொருள் வியாபாரி கைது...!!


மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை வியாபாரத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற 10,820 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளம் போதைப்பொருள் வியாபாரியொருவர் நேற்று (2021-07-16) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தொகையும் கைப்பற்றப்பட்டது.

அத்தோடு தமது அடையாள அட்டைகளை வழங்கி போதைப்பொருளை கடனாகப் பெற்றுக் கொண்டோரின் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகளின்படி மேலும் பலரைக்கைது செய்யும் நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரம் குறித்த வீட்டில் கடந்த வருடம் 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



No comments: