மட்டக்களப்பு - செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் சடங்கு உற்சவம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இது எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை பின்னிரவு திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.
மேலும் நாட்டில் தற்போது கொரோணாத் தொற்று நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் மக்களின் பாதுகாப்புக் கருதி சடங்கு மாத்திரம் சம்பிரதாய முறைப்படி நடாத்தப்படுகின்றது.
அம்மன் சடங்கு காலப்பகுதியில் பொதுமக்கள் எவரும் எக்காரணம் கொண்டும் ஆலய வளாகத்தினுள் வர அனுமதிக்கப்படவில்லை.
எனவே பக்தர்கள் உரிய ஆசாரங்களைப் பேணி வீட்டிலிருந்தவாறே வழிபாடுகளை மேற்கொள்வதுடன் கொடிய கொரோனா நோயிலிருந்து அனைவரும் விடுபட பிரார்த்திக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.
இம்முறை ஆலயக் கதவு திறந்த பின்னர் எவ்விதமான நேர்கடன்களோ, பூஜைப் பொருட்களோ ஆலயத்தினால் பெற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், இந்த நாட்களில் அங்கப்பிரதட்சனை, கற்பூர விளக்கு எடுத்தல், போன்ற எந்தவித செயற்பாடுகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
ஆலய சடங்கு உற்சவ காலப்பகுதியில் ஆலய வளாகத்தினுள் அல்லது அதன் சூழலில் கடைகள் வைப்பது, ஒன்று கூடுவது, யாசகம் பெறுதல், அன்னதானம் வழங்குதல் போன்றன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்நிபந்தனைகளை மீறுவோர் மீது தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தொடர்பான சட்டவிதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம், என்பதுடன் அன்னையின் சடங்கு நிறுத்தப்பட்டு ஆலயம் பூட்டப்படுவதற்கான காரணமாகவும் அமையலாம்.
எனவே இவ்வருட அம்மன் சடங்கினை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரின் மேற்பார்வையோடு நடத்த பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இறைஅன்புடன் ஆலய நிருவாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
No comments: