News Just In

5/22/2021 04:26:00 PM

தமிழ் புறக்கணிக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் இலத்திரனியல் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்!!


சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில் தப்புல டி லிவேரா மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கியூ ஸென்ஹொங் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.

அந்த நினைவுப்பலகையில் சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீனமொழிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதுடன் அதில் இலங்கையில் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி இடம்பெறவில்லை.

அந்த நினைவுப்பலகையில் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டதுடன் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது.

அதனைத்தொடர்ந்து இதுகுறித்து இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டுள்ளது:

'இது சீன அரசாங்கம் மற்றும் மக்களின் நிதியுதவியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகமாகும். அதன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகையில் சீனாவிற்கான மரியாதை நிமித்தமாக சீனமொழி உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்' என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவ்வாறிருக்கையில் நாட்டின் உள்ளக விவகாரங்கள் குறித்து சீனத்தூதரகம் தெளிவுபடுத்தல்களைச் செய்துவருவது தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: