News Just In

5/29/2021 12:29:00 PM

பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு- கனடாவில் இடம்பெற்ற பெரும் அதிர்ச்சி சம்பவம்...!!


கனடாவின் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்களால் பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை லட்சக்கணக்கில் ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர்.

இதனால் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்துவந்த பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா நாட்டிலும் பூர்வ குடிமக்கள் ஏராளமானோரை கொன்று குவித்தார்கள். அங்கு நாகரிக ஆட்சி வந்த பிறகும்கூட பூர்வ குடிமக்களை ஒழிப்பது நிற்கவில்லை. ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக விடுதியுடன் கூடிய பள்ளிகளை நடத்தினார்கள்.

அவ்வாறு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல குழந்தைகள் மாயமான சம்பவம் நடைபெற்றது. இந்த நிலையில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. 1978-ல் பள்ளி மூடப்பட்டுவிட்டது. ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

அத்துடன் அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதனையடுத்து மேலும் அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது.

இதேவேளை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை என கூறப்படும் நிலையில் இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: