News Just In

4/11/2021 05:14:00 PM

அம்பாரையில் இடம்பெற்ற அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழா!!


(கல்லடி நிருபர்)
அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் முப்பெரும் விழாவில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளையும், சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களையும் பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர்களையும், பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் அவர்களது தலைமையில் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் பிரதான ஆராதனை மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.காசீம், அக்கரைப்பற்று வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர் (அபிவிருத்தி) எம்.எம்.சித்தி பாத்திமா, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எல்.ஹமுருதீன், சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன், சங்கத்தின் முன்னால் செயலாளர் நாயகம் என்.ரமணீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, அருள்மறை ஓதுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இருந்து கடந்த 2016, 2017, 2018, 2019 மற்றும் 2020 ம் ஆண்டுகளில் தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் மற்றும் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் முதலானோர் பாராட்டி, பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் "முகை" விழா மலர் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், அதன் முதல் பிரதிகள் அதிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களை
சங்கத்தின் தலைவர், செயலாளர் நாயகம் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட மீயுயர்பீட உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் தொழிற்சங்கத்தின் அம்பாரை மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.தேவ் ஆனந்த் உட்பட சங்கத்தின் மீயுயர் பீட உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.













No comments: